இலங்கையில் பல திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனையும் சீனா

இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்ய விரும்புவதாக சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளதாக, ஞாயிறு இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்படவில்லை, அதாவது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க விரும்பவில்லை. இந்த நிலையில், கடன் கொடுப்பனவை பிற்போடுவதற்குப் பதிலாக இலங்கையில் சீனத் திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சர்வதேச மாநாட்டு அரங்குகள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தாமரை கோபுரம் மற்றும் பல கட்டுமானங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றது.

அவற்றில், இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கியமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் மத்தள விமான நிலையமும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையின் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனக் கடன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சீனா தனது கடன் தவணைகளின் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் சீனக் கடன் மறுசீரமைக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மறுசீரமைப்பதில் இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இதன் விளைவாக, சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தெளிவாக முடிவடையும் வரை இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினம் என குறித்த செய்தித்தாள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.