கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - வடமாகாண ஆளுநர் பணிப்பு
Updated: Nov 6, 2020

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்
என்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, நாட்டின் பொருளாதார நடவடிக்கைளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முறைகளை தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்த அவர் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள் சுகாதார துறையினர், மற்றும் காவற்துறையினரை ஒன்றிணைத்து, கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டல்களை முறைப்படி கடைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் முறை தொடர்பாக பொதுவான ஒரு திட்டத்தை தயாரிக்கும்படியும், அத்துடன் மாணவர்களிடையேயும் கொரோனா சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரச மற்றும் தனியார் பஸ்களில் பதிவு செய்யப்பட்ட குறித்த பஸ்ஸின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும், பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பஸ்ஸின் இலக்கத்தை இலகுவாக குறித்து வைக்க வேண்டும் எனவும் வலிறுத்தப்பட்டுள்ளது.