உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி தலைமன்னாரில் போராட்டம்.
மன்னார் – தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த ரயில் கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.குறிப்பாக வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்தி, குறித்த ரயில் கடவையில் பொலிஸாரின் கண்காணிப்பு இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள ரயில் கடவையில் கடந்த 16 ஆம் திகதி தனியார் பேருந்தும் ரயிலும் மோதிக்கொண்டதில் தலை மன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த பாலச்சந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவன் உயிரிழந்தார்.
அத்தோடு, பொது மக்கள் 25 பேர் வரையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.