வடகிழக்கில் தமிழர்களின் காணிகளை முப்படைகளுக்கு கபளீகரம் செய்யும் நடவடிக்கை தீவிரம்..!

வடகிழக்கில் முப்படைகளின் பயன்பாட்டிற்காக மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் நடந்துவரும் நிலையில் தமிழ் தரப்புக்கள் தொடர்ந்தும் திரட்டு மௌனம் சாதிப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் கூறியுள்ளார். யாழ்.காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது
தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து முயற்சியை கைவிட்டு நில அளவீட்டு திணைக்களத்தினர் வெளியேறியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில்
கருத்து தெரிவித்த ச.சஜீவன் அடுத்துவரும் நாட்களில் மேலும் பல இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ஏதிர்வரும் 19ம் திகதி காரைநகரில் எலோரா கடற்படை தளத்திற்கென மேலும் 51ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. 67குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை இலக்கு வைத்து அளவீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து பருத்தித்துறை கற்கோவளம், கோட்டயம்புரம் என பல இடங்களில் கடற்படைக்கு காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது. ஆனால் இவ்வாறு காணிகள் சுவீகரிக்கப்பட ஏதுவாக நில அளவைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் வெறுமனே எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும்அரசியல் கட்சி தலைவர்களும் கோவில் திருவிழாவிற்கு வருவது போல வருவதும்அங்கு நின்று புகைப்படமெடுப்பதுடன் ஊடகங்களிற்கு பேட்டி கொடுப்பதுடன் எல்லாமும் முடிந்துவிட்டதாக செல்வதாகவும் உள்ளனர் என கவலை தெரிவித்துள்ளார்.