தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.வியாழேந்திரன் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அன்று தொடக்கம் இன்றுவரைகுரல்கொடுத்து வருவதாகவும், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் எனவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேற்றைய தினம் கடுக்காமுனையில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.
மேலும் இப்பொழுது சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேச வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக தம்மால் அறிய முடிகின்றது என தெரிவித்த அவர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ, நீதி அமைச்சருடனோ பேசவேண்டும் என தெரிவித்தார். கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி
அமைச்சருக்கும் பங்கு இருப்பதுடன், அவர் நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர் எனவும் குறிப்பிட்டார். 300 க்கும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21 இல் வெடித்து சிதறி பலியாகியிருந்தனர், அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும் என சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், பத்து அல்லது இருபது அரசியல்
கைதிகளை விடுதலை செய்தால்தான் வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை முன்வைத்து இருந்தால் கடந்த 4 1/2 வருடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என இதன்போது தெரிவித்திருந்தார்.